Monday, December 26, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 6 (இறுதி பகுதி)


இத்தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க வழிதேடும் சுவடுகள்
***************************************************************************************
“கதிர்… கெதியா போட்ட கரைப்பக்கம் திருப்பு.. அவங்கள் வாறதுக்குள்ள எப்பிடியும் கொஞ்ச தூரம் கரைய நெருங்கியிரலாம். கரைய அண்டி அவங்கள் வரமாட்டாங்கள்…” பாலன் அண்ணா படபடத்தார்.

எல்லாரும் திக்பிரமை பிடித்தவர்களாக செய்வதறியாது நின்றார்கள். ஒரு பிரச்சினையை கடந்து வருவதற்குள் அடுத்த பிரச்சினை.அப்பன்.. பிள்ளைகுட்டியளோட போற..... பார்த்துப்போ. கடல்ல போகேக்க ஆமிக்காரன் கண்டா சுட்டுப்போடுவானாம்.” வெளிக்கிடும்போது பக்கத்து வீட்டுக்காரர் சொன்னது கண்முன் வந்து நின்றது. மரணம்தான் நெருங்கி வருகிறது.. எனிமேல் விசுவமடுவும் இல்லை, யாழ்ப்பாணமும் இல்லை.. யாருமற்றவர்களாய் கடலிலேயே சாகப்போகிறோம்..

Thursday, December 22, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 5


தொடரின் முன்னைய பாகங்களை படிக்க வழிதேடும் சுவடுகள்
***************************************************************************************
“இப்பிடியே விட்டிட்டு போக மனமில்லாமல் கிடக்குது ஆச்சி..கிடங்கு ஒண்ட வெட்டி புதைச்சுவிடுவம்” பொன்னம்மா கிழவியும் சரியென்பதுபோல் தலையாட்டினார்.
“ஓமடாப்பா… இல்லாட்டி சீவன் இங்கினைக்கதான் அந்தரிக்கும்”
“ஓம் ஆச்சி”
ராசன் மாமா எடுத்துவந்த பலகைத்துண்டால் இருவரும் மண்ணை கிளற ஆரம்பித்தார்கள்.. மணல் மண்ணாகையால் அவ்வளவு சிரமமாக இல்லை. பதினைந்து நிமிடத்திலேயே அளவான கிடங்கு வந்துவிட்டது.

Sunday, December 18, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 4


இந்த பதிவின் முதல் பாகங்களை படிக்க
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கிலோமீற்றர் தூரம் படகை இழுத்தபடியே கடந்துவிட்டிருப்போம். திடீரென கமலா அத்தை வீரிட்டு கத்தினார். “என்ன நடந்தது!!?? என்ன நடந்தது!!?? எல்லோரும் பதறிப்போனார்கள்.

காரணம் கமலா அத்தை கர்ப்பிணி.ஏதாவது நடந்துவிட்டதோ என்று எல்லோரும் பதற கமலா அத்தை படகிற்கு எதிர்த்திசையில் கையை காட்டினார்...

திரும்பி பார்க்க அங்கே இரண்டு உடல்கள் அலையில் அடிக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது.....

ஒருகணம் எல்லோர் இரத்தமும் உறைந்துபோக, உடலியக்கங்கள் செயல் இழந்து, தலை விறைக்க அந்ததிசையை பார்த்தபடியே நின்றோம். இரண்டு, மூன்று நான்கு என்று அடுத்தடுத்து சடலங்கள் மிதந்து வந்தபடியே இருந்தது. பெண்கள், பிஞ்சுக்குழந்தைகள் யாருமே எஞ்சவில்லை.

Saturday, December 10, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 3


இத்தொடரின் முதல் பாகங்களை படிக்க

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நள்ளிரவு. பக்கத்தில் யார் இருக்கிறார் என்று அறியமுடியாத கடும் இருள். மழை ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக ஆங்காங்கே சிறிய மின்னலும் குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டிருந்தது. படகுக்காரர்கள் வைத்திருந்த டோர்ச்லைட் ஒளியை தவிர வேறு வெளிச்சம் எதுவும் இல்லை.

எல்லாம் சரியோ... பிறகு வெளிக்கிட்டாப்பிறகு அத விட்டிட்டம். இத விட்டிட்டம் எண்டு கத்தக்கூடாது சொல்லிப்போட்டன்...!”

பாலன் அண்ணை கண்டிப்பாக கூறிவிட்டு நங்கூரத்தை இழுக்கத்தொடங்கினார்.